எளிமையின் சிகரம்: நூற்றாண்டு கண்ட நல்லகண்ணுவின் தியாக வாழ்வு – ஒரு சிறப்புத் தொகுப்பு!
இந்திய அரசியல் களத்தில் தூய்மைக்கும் எளிமைக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு, ஒரு சகாப்தத்தின் சாட்சியாக அமைகிறது. 1925-ம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஸ்ரீவைகுண்டத்தில் ராமசாமி – கருப்பாயி தம்பதிக்கு மகனாகப் பிறந்த இவர், தனது 18-வது வயதிலேயே (1943) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, இறுதி மூச்சு வரை அதே கொள்கைப் பாதையில் பயணித்தவர். பள்ளிப் பருவத்தில் காந்தியவாதியாகத் தன் பயணத்தைத் தொடங்கியவர், ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் மாணவர்களைத் திரட்டிப் போராடி, திருநெல்வேலியின் சுதந்திரப் போராட்டக் களங்களில் முக்கியப் பங்காற்றினார்.
அரசியல் வாழ்வில் கிளைச்செயலாளர் முதல் மாநிலச் செயலாளர் வரை பல்வேறு பொறுப்புகளை வகித்த நல்லகண்ணு, ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்ற முழக்கத்துடன் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நூற்றுக்கணக்கான போராட்டங்களை முன்னெடுத்தார். 1980-ல் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியிலும், 1999-ல் கோவை நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினாலும், தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனுக்காகவே அவர் உழைத்தார்.
இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை கொண்ட இவர், 2010-ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் தாமே நேரில் ஆஜராகி வாதாடியது குறிப்பிடத்தக்கது. இவரது தன்னலமற்ற பொதுச்சேவையையும், தமிழ்நாட்டிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் கௌரவிக்கும் விதமாக, 2022-ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு ‘தகைசால் தமிழர்’ விருதினை வழங்கிச் சிறப்பித்தது. கொள்கை உறுதி, எளிமை மற்றும் அர்ப்பணிப்பு மிக்க அவரது வாழ்க்கை, தமிழக அரசியல் வரலாற்றில் என்றும் அழியாத சுவடாக நிலைத்திருக்கும்.