திருச்சியில் பாதுகாப்பு இன்றி திமுக சார்பில் ஜல்லிக்கட்டு: பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடும் அவதி
திருச்சி காஜாமலையில் உள்ள கல்லூரி விளையாட்டு மைதானத்தில், முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சட்டக் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் ஈவெரா பெரியார் கல்லூரி என முக்கிய கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள இப்பகுதியில், ஜல்லிக்கட்டு மாடுகள் சாலைகளில் தறிகெட்டு ஓடுவதால் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் உயிர் பயத்துடன் நடமாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, உரிமையாளர்களின் கட்டுப்பாட்டை இழந்த சில மாடுகள் சாலையில் தெறித்து ஓடியதில் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. முன்னறிவிப்பு ஏதுமின்றி சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுப் போக்குவரத்து மாற்றப்பட்டதால், வாகன ஓட்டிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர். பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள சமூக ஆர்வலர்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி நடத்தப்படும் இப்போட்டிகளால் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உருவாகியுள்ளதாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.