“கொலைகாரர்களின் கூடாரமாக மாறிவிட்டது அறிவாலயம்” – திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்குதல்!
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக ஆட்சியின் கீழ் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, வண்டி நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட சிறு தகராறில், உதவித் தொழிலாளர் ஆய்வாளர் சிவமூர்த்தி என்பவர் மீது திமுக மாவட்டத் துணைச் செயலாளரின் மகன் ஆதித்யா காரை ஏற்றிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் “திமுககாரன்” என்ற அடைமொழி குற்றங்கள் செய்வதற்கான அடையாள அட்டையாக மாறிவிட்டதாகச் சாடியுள்ளார்.
மேலும், பொதுமக்கள் அடிமைகளைப் போல நடத்தப்படுவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன்” என்று மேடைகளில் பேசுவதுடன் நின்றுவிடாமல், அதிகார மமதையில் தறிகெட்டுத் திரியும் தனது கட்சியினரை முதல்வர் முதலில் கட்டுப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ரவுடிகளை மட்டுமே கொண்டு கட்சி நடத்தும் திமுகவை, அரியணையில் இருந்து மட்டுமல்லாமல் தமிழக அரசியலில் இருந்தே ஒட்டுமொத்தமாக அப்புறப்படுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.