விநாயகர் கோயிலை அகற்ற எதிர்ப்பு: ஆவடியில் பொதுமக்கள் நூதன தீபப் போராட்டம்
சென்னை ஆவடி அருகே உள்ள அயப்பாக்கம் விஜிஎன் குடியிருப்பில் அமைந்துள்ள சுந்தர விநாயகர் ஆலயத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் கையில் தீபம் ஏந்தி தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர். பல ஆண்டுகளாக வழிபாட்டில் இருந்து வரும் இந்த ஆலயம், சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அங்குள்ள குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாகத் தெரிகிறது.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், வருவாய்த் துறையினர் கோயிலை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதையறிந்த அப்பகுதி பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் எனப் திரளானோர் ஒன்றிணைந்து, கோயிலைப் பாதுகாக்கக் கோரி கைகளில் தீபங்களை ஏந்தி அமைதி வழியில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.