திமுக இளைஞரணி மாநாடு: கொள்கை முழக்கங்களுக்கு இடையே மதுபோதையில் மிதந்த தொண்டர்கள் – வைரலாகும் வீடியோ!
கோவை:
கோவை கருமத்தம்பட்டியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மேற்கு மண்டல மாநாட்டில், ஒருபுறம் கட்சியின் கொள்கை முழக்கங்கள் ஒலித்துக்கொண்டிருக்க, மறுபுறம் ஒரு சில தொண்டர்கள் மது போதையில் இருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்
இந்த மாநாட்டிற்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கருமத்தம்பட்டியில் குவிந்தனர். மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு திமுக சார்பில் தின்பண்டங்கள் அடங்கிய பிரத்யேகப் பைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், மாநாட்டுத் திடலில் தலைவர்களின் உரைகளைக் கேட்க வேண்டிய தொண்டர்களில் ஒரு தரப்பினர், கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை நோக்கிப் படையெடுத்தனர்.
மாநாட்டுத் தின்பண்டங்களே ‘சைட் டிஷ்’
மது பாட்டில்களை வாங்குவதற்காக டாஸ்மாக் கடைகளில் தொண்டர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மது வாங்கிய கையோடு, மாநாட்டில் வழங்கப்பட்ட காரம் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளைத் திறந்து, டாஸ்மாக் வாசலிலேயே அமர்ந்து அவற்றை ‘சைட் டிஷ்’ ஆகப் பயன்படுத்தி மது அருந்தினர்.
சமூக வலைதளங்களில் விமர்சனம்
மேடையில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கொள்கை மற்றும் லட்சியங்கள் குறித்துப் பேசிக்கொண்டிருந்த அதே வேளையில், வெளியே தொண்டர்கள் பொது இடங்களில் மது அருந்தும் காட்சிகள் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த நிகழ்வு மாநாட்டின் நோக்கத்தைச் சிதைப்பதாகப் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் தரப்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.