முருகப்பெருமானுக்காக 7 தீபங்கள் ஏற்றி கந்தசஷ்டி கவசம் பாடுங்கள்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்!
சென்னை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்தின் அடுத்தகட்டமாக, இன்று (பிப்ரவரி 23) இல்லங்கள் தோறும் ஏழு தீபங்களை ஏற்றி வழிபாடு நடத்துமாறு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் மீண்டும் தீபமேற்றப்பட வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதை நினைவு கூர்ந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, சஷ்டியும் கிருத்திகையும் இணைந்து வரும் இன்றைய சிறப்பான நன்னாளான பிப்ரவரி 23-ஆம் தேதியன்று, முருகப்பெருமானுக்காக ஆறு தீபங்கள் மற்றும் அவரவர் வாழும் பகுதியின் நன்மைக்காக ஒரு தீபம் என மொத்தம் ஏழு விளக்குகளை ஏற்றி வழிபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இந்தத் தீப வழிபாட்டின் போது ‘கந்தசஷ்டி கவசம்’ பாராயணம் செய்து முருகனின் பேரருளைப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, வருகின்ற மார்ச் 2-ஆம் தேதி பௌர்ணமி அன்று மாலை வேளையில், திருப்பரங்குன்றம் மலையில் திரளாகக் கூடி கிரிவலம் வருவதற்குப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முன்வர வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.