தமிழகத்தில் பெருகிவரும் போதை கலாச்சாரம்: திமுக அரசு மீது பாஜக செயற்குழு உறுப்பினர் உமா ரதி கடும் குற்றச்சாட்டு
மார்த்தாண்டம்: தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதையும், பள்ளிச் சிறுவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதையும் திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் உமா ரதி சாடியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில், திமுக அரசுக்கு எதிராகத் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த உமா ரதி, தற்போதைய சூழலில் தமிழகம் முழுவதும் போதை கலாச்சாரம் கட்டுக்கடங்காமல் பெருகிவிட்டதாகக் கவலை தெரிவித்தார். குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு மிக எளிதாகப் போதைப்பொருட்கள் கிடைப்பதாகவும், இது எதிர்காலத் தலைமுறையைச் சீரழிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைப் போதையின் பிடியிலிருந்து மீட்கத் தவறிய திமுக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்த அவர், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாகத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.