திண்டுக்கல் பரபரப்பு: நலத்திட்ட உதவிகள் வழங்கிய திமுக ஒன்றியச் செயலாளருக்குக் கத்திக்குத்து!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திமுக பிரமுகர் ஒருவரைப் பொதுமக்களின் முன்னிலையிலேயே மர்ம நபர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேடசந்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளரான வீரசாமிநாதன், தனது இல்லத்தில் வைத்துப் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்த மணி என்பவர், வீரசாமிநாதனுக்குச் சால்வை அணிவிப்பது போல நடித்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தில் திடீரெனக் குத்தினார்.
இந்தக் கொடூரத் தாக்குதலைத் தடுக்க முயன்ற நாச்சிமுத்து என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. உடனடியாகச் செயல்பட்ட அங்கிருந்த திமுகவினர், தாக்குதல் நடத்திய மணியை மடக்கிப் பிடித்துக் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த வீரசாமிநாதன் மற்றும் நாச்சிமுத்து ஆகிய இருவரும் சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தாக்குதலுக்கான பின்னணி என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.