லஷ்கர் பயங்கரவாதி ஜுனைத் அகமது குறித்து தகவல் கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு: NIA அறிவிப்பு
தலைமறைவாக உள்ள லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஜுனைத் அகமது குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிரடியாக அறிவித்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு பெங்களூருவில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றத் திட்டமிட்ட கும்பலை போலீஸார் கைது செய்த நிலையில், இந்த வழக்கு NIA-விடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில், பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள பயங்கரவாதி நசீர், சிறைக்குள்ளேயே கைதிகளைப் பயங்கரவாதப் பாதையில் தூண்டிய அதிர்ச்சித் தகவல் வெளியானது.
இந்தச் சதித்திட்டத்திற்கு உடந்தையாக இருந்ததாக உதவி காவல் ஆய்வாளர் ஜான் பாஷா, சிறை மருத்துவர் நாகராஜ் மற்றும் ஜுனைத் அகமதுவின் தாயார் அனீஷ் பாத்திமா ஆகியோரை அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்துள்ளனர். இருப்பினும், இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான ஜுனைத் அகமது தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இதனையடுத்து, அவரது புகைப்படம் மற்றும் முகவரி அடங்கிய சுவரொட்டிகளை வெளியிட்டுள்ள NIA, அவரைப் பற்றிய ரகசியத் தகவல் தருவோருக்குப் பரிசுத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.