சட்டசபை தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் அடுத்த வாரம் தமிழகம் வருகை
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைகளின் ஐந்து ஆண்டுக் கால பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது.
அதன்படி, மேற்கு வங்காளம் (மே 7), தமிழகம் (மே 10), அசாம் (மே 20), கேரளா (மே 23), புதுச்சேரி (ஜூன் 15) ஆகிய மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் நிறைவடைகிறது.
இதனைத் தொடர்ந்து, இந்த ஐந்து மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, சம்பந்தப்பட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று முடிக்கப்பட்டுள்ளன. மேலும், விரைவில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் ஏற்பாடுகளை மதிப்பாய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழு அடுத்த வாரம் தமிழகம் வர உள்ளது.
அதன்படி, வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான தேர்தல் ஆணையக் குழுவினர் தமிழகம் வரவுள்ளனர்.
தமிழகம் வரும் இந்த குழுவினர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது, தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல் தேதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.