கோவில்பட்டி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து – 3 டன் தக்காளி சேதம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 டன் தக்காளி சேதமடைந்தது.
ஓசூரில் இருந்து தென்காசி மாவட்டம் ஆலங்குளத்திற்கு தக்காளி ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் வாகனம் மோதி, கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். ஆனால், வாகனத்தில் இருந்த சுமார் 3 டன் தக்காளி சாலையில் சிதறி சேதமடைந்தது.
இதன் காரணமாக அந்த பகுதியில் சில நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு, போக்குவரத்தை சீரமைத்தனர்.