கள்ளை ஏற்காத தமிழக அரசை தேர்தலில் எதிர்கொள்வோம் – பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் எச்சரிக்கை
மத்திய அரசு கள்ளை உணவுப் பட்டியலில் சேர்த்துள்ள நிலையில், அதனை ஏற்க மறுக்கும் தமிழக அரசை எதிர்வரும் தேர்தலில் எதிர்கொள்வோம் என தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கல்பாளையம் பகுதியை சேர்ந்த பனையேறும் தொழிலாளி துரைராஜ், கள் இறக்குவதாக கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 10 லிட்டர் பதநீர் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை கண்டித்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பனையேறிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், துரைராஜ் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர். தொடர்ந்து, காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கள்ளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும், பனையேறிகள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.