வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட தமிழக சாமி சிலைகளை மீள ஒப்படைக்க ஒப்புதல்
தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுக்கு கடத்திச் செல்லப்பட்ட தொன்மையான சாமி சிலைகள் மற்றும் கலைப் பொக்கிஷங்களை மீண்டும் இந்தியாவுக்கு ஒப்படைக்க அந்நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன.
தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகள், தொன்மையான பொருட்கள் மற்றும் கலைச் செல்வங்களை கண்டறிந்து மீட்பதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், இந்த கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அண்மையில், தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகள் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் உள்ள சர்வதேச நிறுவனங்கள் மற்றும் ஏல மையங்களில் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவற்றை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த முயற்சியின் பலனாக, சம்பந்தப்பட்ட நாடுகள் சிலைகளை திருப்பி வழங்க ஒப்புதல் அளித்துள்ளன. இதில் திருவாரூர் கைலாசநாதர் கோயில் மற்றும் தஞ்சை நாகநாத சுவாமி கோயில் சிலைகள் உள்ளிட்ட முக்கியமான தொன்மைப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நடவடிக்கை தமிழகத்தின் பண்பாட்டு பாரம்பரியத்தை பாதுகாக்கும் முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.