ஜெர்மனி அருங்காட்சியகத்தைவிட கீழடி பழமையானது – விஸ்வநாதன் ஆனந்த்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி தொல்பொருள் அருங்காட்சியகம், ஜெர்மனியில் உள்ள அருங்காட்சியகத்தைவிட மிகவும் பழமையானது என, இந்தியாவின் முன்னணி செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கீழடியில் ரூ.24 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்த திறந்தவெளி அருங்காட்சியகம், கடந்த 13ஆம் தேதி பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது. தற்போது தினமும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விஸ்வநாதன் ஆனந்த் தனது குடும்பத்தினருடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொல்பொருள் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பண்டைக்கால பகடைகள், ஆட்டக்காய்கள் உள்ளிட்ட பொருட்களைப் பார்த்து அவர் வியப்பை வெளிப்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கீழடி அருங்காட்சியகம் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக பாராட்டினார். சமீபத்தில் ஜெர்மனியில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தை பார்வையிட்டதாகவும், அதனைவிட கீழடி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும், பழமையானதுமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
கீழடி அருங்காட்சியகம் தமிழர் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் முக்கிய மையமாக விளங்குகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.