தனியார் பள்ளி ஆண்டு விழாவில் முருகர் நாடகம்: ட்ரோன் காட்சியில் மெய்சிலிர்த்த பார்வையாளர்கள்
சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், மாணவர்கள் அரங்கேற்றிய முருகர் நாடகம் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
அம்பத்தூர் அடுத்த புதூரில் அமைந்துள்ள இந்த பள்ளியின் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை வழங்கி அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.
விழாவின் இறுதிக்கட்டமாக, சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி தங்களது மகன்களான விநாயகர் மற்றும் முருகருக்கு ‘ஞானப்பழம்’ வழங்கும் திருவிளையாடல் நாடகம் மேடையேற்றப்பட்டது.
இந்த நாடகத்தில், முருகன் வேடமணிந்த மாணவர் ட்ரோன் தொழில்நுட்பத்தின் மூலம் உலகத்தை விரைவாகச் சுற்றி வந்து ஞானப்பழத்தை பெறுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நவீன கற்பனை வடிவமைப்பு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
மாணவர்களின் திறமை, படைப்பாற்றல் மற்றும் புதிய முயற்சிகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இந்த நிகழ்ச்சி, ஆண்டு விழாவுக்கு கூடுதல் சிறப்பு சேர்த்ததாக பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.