1,400 ஏக்கர் நில மீட்பு போராட்டம்: விவசாயிகள் 70 பேர் கைது
சேலம் மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்ட 1,400 ஏக்கர் விவசாய நிலத்தை மீட்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் அத்திப்பட்டி, சூரியூர் பகுதிகளில் பல ஆண்டுகளாக விவசாயிகள் சாகுபடி செய்து வந்த நிலங்களை, கடந்த 2004 ஆம் ஆண்டு மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தி தரிசு நிலமாக மாற்றியதாக கூறப்படுகிறது. இதனால், சுமார் 600 விவசாய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலத்தை மீட்கக் கோரி கடந்த 20 ஆண்டுகளாக விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த 9 ஆம் தேதி முதல் அகில இந்திய விவசாயிகள் மகா சபையை சேர்ந்தவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மாநகராட்சி நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து, விவசாயிகள் பறிக்கப்பட்ட நிலத்தில் நுழைந்து மரங்களை வெட்டி சாகுபடி செய்ய முயன்றனர். இதனை போலீசார் தடுத்ததால், அங்கு வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 70 பேரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.