கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் ஆறாத வடுவாக உள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு
சென்னை: 1998ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் இன்னும் ஆறாத வடுவாக உள்ளதாக தேசிய பொதுக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
1998ஆம் ஆண்டு சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்ததுடன், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது மக்களின் மனதில் நீங்காத துயரமாக பதிந்துள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார வளர்ச்சியில் முன்னணி நகரமாக இருக்க வேண்டிய கோயம்புத்தூர், பிரிவினைவாத சக்திகள் மற்றும் அரசியல் காரணங்களால் பல ஆண்டுகள் பின்னடைவை சந்தித்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சிலரை முன்கூட்டியே விடுவித்தது உயிரிழந்தவர்களுக்கு துரோகம் எனவும், கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை சிலிண்டர் வெடிப்பு என விளக்க முயற்சித்தது தவறு எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பை முதன்மைப்படுத்தாத அரசியல் நிலைப்பாடுகள் மாற்றப்பட வேண்டும் என்றும், உயிரிழந்த அப்பாவிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீவிரவாதத்துக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகள் அவசியம் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.