தென்காசி நகராட்சி கூட்டத்தில் தள்ளுமுள்ளு: பாஜக–சுயேட்சை கவுன்சிலர்கள் மோதல்
தென்காசி: தென்காசி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தின் போது (பாஜக) கவுன்சிலர் மற்றும் சுயேட்சை கவுன்சிலர் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளுவாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மங்கம்மா சாலை பகுதியில், தனியார் சார்பில் வீட்டு மனை பிரிப்பதற்கான திட்டத்திற்கு நகராட்சிக்கு கட்டணம் செலுத்தாமல் ஒப்புதல் வழங்கும் தீர்மானம் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாஜக கவுன்சிலர் சங்கர சுப்பிரமணியன் மற்றும் நகரமைப்பு அலுவலர் அப்துல் காதர் விவாதித்து கொண்டிருந்தபோது, சுயேட்சை கவுன்சிலர் முகமது ராஜப்பா இடையூறு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் நிலைமை தீவிரமடைந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் நகராட்சி வளாகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழலை உருவாக்கியது.