கோவை குண்டு வெடிப்பு போன்ற துயரங்கள் மீண்டும் நடைபெறக்கூடாது: நயினார் நாகேந்திரன் உறுதி
சென்னை: கோவை குண்டு வெடிப்பு போன்ற கொடூரச் சம்பவங்கள் இனி ஒருபோதும் நடைபெறக்கூடாது என உறுதியேற்போம் என்று தமிழக மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார்.
1998ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்தின் நினைவு நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்றைய தினம் பல அப்பாவி உயிர்கள் பலியாகி, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த துயரம் இன்னும் மக்களின் நினைவில் நீங்காததாக கூறியுள்ளார்.
28 ஆண்டுகள் கடந்தபோதிலும், அந்தச் சம்பவத்தின் வலி மற்றும் தாக்கம் மக்களின் மனதில் ஆழமாக பதிந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெறுப்புணர்வு காரணமாக உயிரிழந்த அப்பாவிகளை கனிந்த இதயத்துடன் நினைவுகூர வேண்டிய நாள் இது என்றும் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் நிலவும் நாட்டில் மதவெறி காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் எனவும், அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை காக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.