கல்லூரி உணவில் குறைபாடு சந்தேகம் – மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
சேலம் மாவட்டத்தில் தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் பரபரப்பு
, சங்ககிரி அருகே செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட காலை உணவை சாப்பிட்ட சில மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
குப்பனூர் பிரிவு சாலையில் அமைந்துள்ள இந்தக் கல்லூரியில், வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். விடுதியில் தங்கும் மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் வழக்கமாக உணவு வழங்கி வருகிறது.
இந்நிலையில், காலை உணவு உட்கொண்ட பிறகு சில மாணவர்கள் வாந்தி மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகளை அனுபவித்ததாக கூறப்படுகிறது. இதனால் உடனடியாக மாணவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது.
உணவில் பல்லி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.