சூலூர் அருகே 6 ஆண்டுகளாக செயல்படாத குடிநீர் தொட்டி – அரசு நடவடிக்கை எடுக்குமா? சிறப்பு தொகுப்பு
கோவை மாவட்டம் சூலூர் அருகிலுள்ள காடம்பாடி ஊராட்சியில், பொதுமக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சேமிப்பு தொட்டி கடந்த ஆறு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பலமுறை மனுக்கள் அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பிரச்சினை நிலவும் இடம் காடம்பாடி ஊராட்சியின் டிபென்ஸ் காலனி. முன்னாள் ராணுவத்தினரின் குடும்பங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் இங்கு வசித்து வருகின்றனர். 2019ஆம் ஆண்டு சுமார் ரூ.11 லட்சம் செலவில் தரைமட்ட நீர்த் தொட்டி கட்டப்பட்டது. ஆனால் கட்டுமானம் முடிந்தபின்னரும் அது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின் அமைதியான வாழ்க்கைக்காக இங்கு குடியேறியதாக கூறும் முன்னாள் ராணுவத்தினர், தற்போது குடிநீருக்காகவே சிரமப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். ஆறு ஆண்டுகள் கடந்தும், இந்தத் தொட்டியிலிருந்து ஒரு துளி நீரும் விநியோகிக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், பராமரிப்பு இல்லாததால் தொட்டியின் சிமெண்டு பூச்சுகள் சேதமடைந்து, குழாய்கள் துருப்பிடித்து வருவதாகவும் குடியிருப்போர் கூறுகின்றனர். இதனால் பொதுமக்களின் வரிப்பணம் வீணாகியுள்ளதாகவும் அவர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடி கவனம் செலுத்தி, டிபென்ஸ் காலனியில் பயன்பாடின்றி உள்ள குடிநீர் தொட்டியை சீரமைத்து, குடியிருப்போருக்கு நிலையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.