தமிழ்நாடு அரசு நிலக்கரி திட்ட அறிக்கையை தாக்கல் செய்யவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்
நிலக்கரி எரிவாயுவாக்கம் மற்றும் சுத்தமான நிலக்கரி முயற்சிகளுக்கான நிதி பெற தேவையான திட்ட முன்மொழிவை தமிழ்நாடு அரசு சமர்ப்பிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மக்களவையில் தெரிவித்தார்.
மக்களவையில் திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், விரிவான புள்ளிவிவரங்களுடன் நிலவரத்தை விளக்கினார்.
அதன்படி, தமிழ்நாட்டில் 7,184 மெகாவாட் மின் உற்பத்தி திறனை ஆதரிக்க 6.42 மில்லியன் டன் நிலக்கரி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, ஒரு யூனிட் மின் உற்பத்திக்கு வழங்கப்படும் நிலக்கரி அளவு தமிழ்நாட்டிற்கு அதிகமாக இருப்பதாகவும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் பயன்பாடு ஆண்டுக்காண்டு குறைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நிலக்கரி எரிவாயுவாக்கம் மற்றும் தூய்மை நிலக்கரி திட்டங்களுக்காக தமிழ்நாட்டிற்கு ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டிருந்தும் அது வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் எந்த மாநிலத்திற்கும் முன்பாகவே தனிப்பட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என விளக்கிய அவர், இத்திட்டத்தின் வாயிலாக நிதி பெறுவதற்காக தமிழ்நாடு அரசு அல்லது அதன் தொடர்புடைய அமைப்புகளிடமிருந்து இதுவரை எந்தவிதமான விண்ணப்பமும் வரவில்லை எனத் தெளிவுபடுத்தினார்.