2000 கி.மீ. நடந்து கங்கை நீர் சுமந்து வந்து ராமேஸ்வரத்தில் அபிஷேகம் – பக்தர்களின் அர்ப்பணிப்பு
ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசாமி திருக்கோவிலுக்கு கங்கையிலிருந்து புனித நீர் சுமந்து வந்த பக்தர்கள், ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
புகழ்பெற்ற இந்த திருத்தலத்திற்கு தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலம் கௌரா பகுதியைச் சேர்ந்த மலை டா, ருத்ரா பப்பு, கோலு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுமார் 2000 கிலோமீட்டர் தூரத்தை நடந்து கடந்து ராமேஸ்வரம் வந்தடைந்தனர். அவர்கள் சுமார் 80 கிலோ எடையுடைய கங்கை நீரை சுமந்து கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் ராமநாதசாமி திருக்கோவிலுக்குள் சென்று, கொண்டு வந்த கங்கை நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதன் மூலம் தாங்கள் எடுத்திருந்த நேர்த்திக்கடன் நிறைவேறியதாகவும், ஆன்மீக மகிழ்ச்சி மற்றும் மனநிறைவு அடைந்ததாகவும் தெரிவித்தனர்.
2000 கிலோமீட்டர் தூரத்திலிருந்து பக்தி உணர்வுடன் கங்கை நீரை சுமந்து வந்து அபிஷேகம் செய்த இவர்களின் செயல், அங்கு திரண்டிருந்த பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.