தொமுச அலுவலகத்தில் இருதரப்பினரிடையே மோதல் – சென்னையில் பரபரப்பு
சென்னையில் திமுகவின் தொழிலாளர் அமைப்பான தொழிலாளர் முன்னேற்ற சங்க (தொமுச) அலுவலகத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பதற்ற நிலை ஏற்பட்டது.
தொமுசின் கீழ் மாநகர போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் நிர்வாகிகளின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த நிலையில், புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறாமல் தாமதமாகி வந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கொளத்தூர் மற்றும் பெரம்பூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தற்காலிக நிர்வாகிகளாக அண்மையில் நியமிக்கப்பட்டனர். ஆனால், 2022ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வந்த பழைய நிர்வாகிகளே அடுத்த தேர்தல் நடைபெறும் வரை தொடர்வார்கள் என பின்னர் அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தொமுச அலுவலகத்திற்கு வந்த பழைய நிர்வாகிகளுக்கும், அங்கு ஏற்கனவே இருந்த புதிய நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியதால் அங்கு பரபரப்பு நிலவியது.