மதுரை விமான நிலைய நிலம் கையகப்படுத்தல் விவகாரம் – அமைச்சர் மூர்த்தி மீது சின்ன உடைப்பு கிராம மக்களின் எதிர்ப்பு தீவிரம்
மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள சின்ன உடைப்பு கிராமத்தில், அமைச்சர் மூர்த்தி தொடர்பான கருத்து விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக மொத்தம் 633 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் விமான நிலையம் அருகிலுள்ள சின்ன உடைப்பு கிராமத்தில் 18 ஏக்கர் நிலமும் உட்படுகிறது.
1999ஆம் ஆண்டு செய்யப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில், அந்த 18 ஏக்கர் பரப்பில் வசித்து வந்த 64 வீடுகளுக்கு இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டு, 2022ஆம் ஆண்டு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானதாக இல்லை எனக் கூறி, அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், திமுக தேர்தல் அறிக்கை குழு மதுரை வந்ததை அறிந்த கிராம மக்கள், குழுத் தலைவர் கனிமொழியை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைக்க முயன்றனர். அப்போது, 18 ஏக்கர் நிலத்தில் வசித்து வந்த 64 பேருக்கே இழப்பீடு வழங்க இயலும் என்றும், மற்றவர்கள் தவறான தகவல் வழங்குவதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர்களை கனிமொழியுடன் சந்திக்க அனுமதிக்காமல் தடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமைச்சரின் இந்த அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சின்ன உடைப்பு கிராமத்தில் மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது அமைச்சர் மூர்த்தியின் உருவப்பொம்மையை எரிக்க முயன்ற நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தலையிட்டு அதை தடுத்து, உருவப்பொம்மையை பறிமுதல் செய்தனர்.