மூடா வழக்கில் புதிய சர்ச்சை – லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு கோடிகள் லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு
மூடா (மைசூர் நகரப்புற மேம்பாட்டு ஆணையம்) தொடர்பான வழக்கில், லோக் ஆயுக்தா போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ.4 கோடி 35 லட்சம் அளவில் லஞ்சம் வழங்கப்பட்டதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, மைசூரில் உள்ள நகரப்புற மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமது பதவியின் செல்வாக்கை பயன்படுத்தி, சுமார் ரூ.56 கோடி மதிப்புள்ள 14 வீட்டு நிலங்களை பெற்றதாக முன்பே புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த புகாரை ஆராய்ந்த மைசூர் லோக் ஆயுக்தா போலீசார், சித்தராமையா உள்ளிட்ட நால்வருக்கும் எதிராக குற்றச்சாட்டு நிலைநிறுத்தப்படவில்லை என அறிக்கை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையை பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில், சினேஹாமஹி கிருஷ்ணா என்ற நபர் இந்த முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். விசாரணை அறிக்கை தயாரிக்கும்போது லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு ரூ.4.35 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.