வேலைநிறுத்தத்தில் பங்கேற்றால் கடும் நடவடிக்கை – மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு
அகில இந்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் கலந்து கொண்டால் கடுமையான தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற உள்ள நாடு முழுவதுமுள்ள வேலைநிறுத்தத்தில் பணியாளர்கள் பங்கேற்காமல், வழக்கம்போல் பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அன்றைய தினத்திற்காக முன்பே வழங்கப்பட்ட அனைத்து விடுப்புகளும் ரத்து செய்யப்படுகின்றன என்றும், வாராந்திர விடுமுறையிலோ அல்லது ஓய்வு பணியிலோ உள்ளவர்களும் அவசியம் பணியில் ஆஜராக வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தத்தால் பணிக்கு வராமல் இருப்பவர்கள் மீது நிலவும் சேவை விதிகளின் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற ஊழியர்களை வேலைநிறுத்தத்தில் ஈடுபட தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என மேலாண்மை தரப்பு தெரிவித்துள்ளது.