அஜித் தோவலின் ராஜதந்திர வெற்றி : குற்றத் தடுப்பில் இந்தியா–கனடா இணைப்பு

Date:

அஜித் தோவலின் ராஜதந்திர வெற்றி : குற்றத் தடுப்பில் இந்தியா–கனடா இணைப்பு

இருநாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சட்டம்–ஒழுங்கு மற்றும் எல்லை கடந்த குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு கூட்டு செயல்திட்டத்தை இந்தியாவும் கனடாவும் உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளன. இதுதொடர்பான விரிவான செய்தி தொகுப்பு வெளியாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டு கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதியாக கருதப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு முன்வைத்தார்.

இந்த குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை, பொருளற்றவை என இந்தியா கடுமையாக மறுத்தது. இதன் தொடர்ச்சியாக, கனடாவுடனான தூதரக உறவுகளை தற்காலிகமாக இடைநிறுத்திய இந்தியா, அந்நாட்டிலிருந்த தனது உயர் ஆணையர் மற்றும் ஐந்து தூதர்களை தாய்நாட்டுக்கு அழைத்தது. அதேபோல், இந்தியாவில் பணியாற்றி வந்த கனடா தூதர்களையும் நாடு விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில் நடைபெற்ற கனடா பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பொறுப்பேற்ற மார்க் கார்னி, இந்தியாவுடன் உறவை சீர்படுத்தும் முயற்சிகளை தொடங்கினார்.

கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்த மார்க் கார்னி, இருநாடுகளின் உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர், இரு நாடுகளின் தலைநகரங்களிலும் தூதரக உயர் ஆணையர்களை மீண்டும் நியமிக்க இரு தலைவர்களும் முடிவு செய்தனர்.

மேலும் கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின்போதும் மோடியும் கார்னியும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, உயர்ந்த இலக்குகளை கொண்ட விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) குறித்து பேச்சுவார்த்தையை தொடங்க இந்தியாவும் கனடாவும் சம்மதம் தெரிவித்தன.

இதற்கிடையில், கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் இந்தியாவுக்கு வந்து, பிரதமர் மோடியையும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக விவாதித்தார்.

அதே காலகட்டத்தில், கனடா பிரதமரின் துணைச் செயலராகவும், தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஆலோசகராகவும் இருந்த நதாலி ட்ரூயின் இந்தியாவுக்கு வருகை தந்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் முக்கியமான ஆலோசனைகளை மேற்கொண்டார்.

இந்நிலையில், கடந்த வாரம் நதாலி ட்ரூயின் கனடாவின் பிரான்ஸ் மற்றும் மொனாக்கோவுக்கான தூதராக நியமிக்கப்பட்டார். தனது புதிய பொறுப்புக்காக பாரிஸ் செல்லத் தயாராகி இருந்த வேளையில், கனடாவிலேயே அவரைச் சந்தித்து இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பில், தேசிய பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கம் தொடர்பான விவகாரங்களில் இருநாடுகளுக்கிடையே ஒருங்கிணைந்த ஒத்துழைப்பை உருவாக்கவும், பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கத் துறைகளுக்கான தொடர்பு அதிகாரிகளை நியமித்து செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் இரு நாடுகளும் இணைந்து முடிவு செய்துள்ளன.

மேலும், உளவுத்துறை தகவல் பரிமாற்றத்தை விரிவுபடுத்தவும், சட்ட அமலாக்க நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபெண்டானில் போன்ற ஆபத்தான போதைப்பொருட்களின் சட்டவிரோதச் சுழற்சி, எல்லை கடந்த போதைப் பயங்கரவாத குழுக்கள் உள்ளிட்ட குற்றங்களை கட்டுப்படுத்த இந்த கூட்டு செயல் திட்டம் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, உள்நாட்டு சட்ட விதிகளுக்கும் சர்வதேச பொறுப்புகளுக்கும் உட்பட்டு, இணைய பாதுகாப்பு கொள்கைகள், சைபர் பாதுகாப்பு சவால்கள் தொடர்பான தகவல் பகிர்வை ஒழுங்குபடுத்தவும், மோசடி மற்றும் குடியேற்ற அமலாக்கம் குறித்த ஒத்துழைப்பை தொடர்ந்து மேம்படுத்தவும் இரு நாடுகளும் உறுதியளித்துள்ளன.

மேலும், கனடாவின் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரியையும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ள அஜித் தோவலின் இந்த கனடா பயணம், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலனில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

காங்கிரஸ் கூட்டணியில் தொடர்வது அவர்களின் தேர்வு – அமைச்சர் ராஜகண்ணப்பன்

காங்கிரஸ் கூட்டணியில் தொடர்வது அவர்களின் தேர்வு – அமைச்சர் ராஜகண்ணப்பன் காங்கிரஸ் கட்சியில்...

சிறு, குறு தொழில்களுக்கு ₹20 லட்சம் வரை பிணையமில்லா கடன் – மத்திய அரசின் முக்கிய முடிவு

சிறு, குறு தொழில்களுக்கு ₹20 லட்சம் வரை பிணையமில்லா கடன் –...

அரசியல் ஆதாயத்தை முன்வைத்து… வேலைநிறுத்தப் போராட்டத்தை புறக்கணிக்க வேண்டும்… பி.எம்.எஸ்

அரசியல் ஆதாயத்தை முன்வைத்து வரும் பிப்ரவரி 12, 2026 அன்று அறிவிக்கப்பட்டுள்ள...

இருகூர் – போத்தனூர் இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு பச்சைக்கொடி

இருகூர் – போத்தனூர் இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு பச்சைக்கொடி கோவை மாவட்டத்தில்...