திமுக நியமித்த வியூக நிறுவனங்கள் தலைமையை தவறாக வழிநடத்துகின்றன – கட்சிக்குள் அதிருப்தி
திமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வியூக ஆலோசனை நிறுவனங்கள் கட்சித் தலைமையை குழப்புவதோடு தவறான பாதையில் அழைத்துச் செல்கின்றன என்று அக்கட்சியினரே குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, தேர்தல் வியூக பணிகளுக்காக திமுக சில தனியார் நிறுவனங்களை தேர்வு செய்தது. அதன்படி, பாப்புலஸ் எம்பவர்மெண்ட் நெட்வொர்க், பென் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தப் பொறுப்புகளை மேற்கொண்டு வந்தன.
இந்த நிலையில், பென் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ஊழியர் அதிக அளவில் வசூலில் ஈடுபட்டதாக கூறப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அந்த நிறுவனங்கள் மீது திமுக நிர்வாகிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர்.
மேலும், இதுவரை சர்வே பணிகளுக்கு மட்டுமே பொறுப்பாக இருந்த பென் நிறுவனம், தற்போது வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளில் தலையிடுவதாகவும், வாக்குச்சாவடி அமைப்பு மற்றும் உறுப்பினர் தேர்வு போன்ற பணிகளை ஐபேக் நிறுவனம் தன் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சுனில் கனுகோல் தலைமையிலான ஒரு நிறுவனம் உதயநிதியை தனது கட்டுக்குள் வைத்திருப்பதாகவும், வியூக நிறுவனங்கள் வசூல் நோக்கில் செயல்படுவதால் எந்தப் பணியும் திட்டமிட்டபடி நடைபெறவில்லை என்றும், குழப்பமே மேலோங்கி நிற்கிறது என்றும் திமுகவினர் அதிருப்தியுடன் தெரிவித்துள்ளனர்.