வலங்கைமான் அருகே அரசுப் பள்ளியில் பாம்பு கடித்து மாணவர் உயிரிழப்பு – திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்
திருவாரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் விஷப்பூச்சி கடியால் உயிரிழந்த சம்பவங்களை குறிப்பிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்காலத்தில் அரசுப் பள்ளிகளில் சுகாதார வசதிகளும், அடிப்படை கட்டமைப்புகளும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் கல்வி பெற வரும் மாணவர்கள், மேற்கூரை இடிந்து விழுமா, தரமற்ற உணவால் உடல்நலப் பிரச்சினை ஏற்படுமா என்ற அச்சத்துடன் பள்ளிக்குச் செல்லும் சூழல் நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், மாணவர்களின் உயிர் பாதுகாப்பையே அலட்சியப்படுத்தும் திமுக அரசு, தமிழக கல்வி தரத்தில் முன்னிலை வகிக்கிறது என பொய்யான விளம்பரங்களை வெளியிடுவது வெட்கக்கேடானது என எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
குரூப்–2 போன்ற முக்கியமான போட்டித் தேர்வுகளைக் கூட ஒழுங்காக நடத்தத் தெரியாத ஒருவர் தமிழகத்தின் முதல்வராக இருப்பது மாநிலத்துக்கு துரதிருஷ்டவசமானது என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.