ஜப்பான் தேர்தலில் அபார வெற்றி – சனே தகாய்ச்சிக்கு பிரதமர் மோடி பாராட்டு
ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வெற்றியை பெற்றுள்ள சனே தகாய்ச்சிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழ்சபையான பிரதிநிதிகள் அவையில் உள்ள 465 உறுப்பினர் இடங்களுக்கான பொதுத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. 36 ஆண்டுகளுக்குப் பிறகு குளிர்காலத்தில் நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில், கடும் பனிப்பொழிவு இருந்தபோதிலும் வாக்காளர்கள் பெருமளவில் பங்கேற்று தங்களது ஜனநாயக உரிமையை பயன்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், லிபரல் டெமோக்ராடிக் கட்சி (LDP) 316 இடங்களில் வெற்றி பெற்றதாக ஜப்பான் அரசு தொலைக்காட்சி அறிவித்தது. ஆட்சி அமைக்க தேவையான 261 இடங்களைத் தாண்டி, மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான இடங்களில் அந்தக் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியை அடுத்து, ஜப்பான் தேர்தலில் வரலாற்று சாதனை படைத்துள்ள பிரதமர் சனே தகாய்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், உலக அமைதி மற்றும் நிலைத்தன்மையை வலுப்படுத்துவதில் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரதமர் சனே தகாய்ச்சியின் திறமையான தலைமையின் கீழ், இந்தியா–ஜப்பான் நட்புறவு மேலும் பல புதிய உச்சங்களை எட்டும் என உறுதியாக நம்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.