சென்னையில் 13வது நாளாக தொடர்ந்த காத்திருப்பு போராட்டம்: ஊராட்சி செயலாளர்கள் கைது
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் தங்களை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், சென்னையில் 13வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஊராட்சி செயலாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வரும் 12,238 ஊராட்சி செயலாளர்களை உறுதியான ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி, கிராம ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது.
கடந்த மாதம் 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை எட்டு நாட்கள் நடைபெற்ற முதல் கட்ட போராட்டத்தின் போது, அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து, போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
ஆனால் அறிவிக்கப்பட்ட காலக்கெடு முடிந்த பிறகும் அரசாணை வெளியிடப்படாததால், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் மீண்டும் 13வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது, அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பிய ஊராட்சி செயலாளர்களை காவல்துறையினர் கைது செய்து, அவர்களை தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர்.