அமெரிக்க வரி குறைப்பு: திருப்பூர் ஏற்றுமதிக்கு புதிய ஊக்கம்
அமெரிக்கா மேற்கொண்ட வரி குறைப்பு நடவடிக்கையால், திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி கணிசமாக உயர வாய்ப்பு உள்ளதாக தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது திருப்பூர் தொழில் உலகத்திற்கு ஒரு மகிழ்ச்சியான தருணம் என அவர்கள் தெரிவித்தனர்.
திருப்பூரில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் சுமார் 40 சதவீதம் அமெரிக்க சந்தைக்கே செல்கிறது.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் பின்னலாடைகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டதால், திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. பல நிறுவனங்கள் ஆர்டர்களை நிறைவேற்ற முடியாமல் சிரமப்பட்டன.
இந்நிலையில், இந்தியா – அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதை தொடர்ந்து, இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 50 சதவீத வரி, 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பூரின் பின்னலாடைத் துறைக்கு மீண்டும் உயிர் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளதாக தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் துணைத் தலைவர் இளங்கோ கூறுகையில்,
“அமெரிக்க வரி விதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக திருப்பூரின் பின்னலாடைத் துறை பெரும் சவால்களை எதிர்கொண்டது. தற்போது வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது திருப்பூருக்கான மிகப்பெரிய வாய்ப்பாகும். இதனால் தொழில்துறைக்கு மீண்டும் நல்ல சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்க வரி குறைப்பு மற்றும் ஐரோப்பிய சந்தையில் வரியில்லா ஒப்பந்தம் போன்ற காரணங்களால், இந்த ஆண்டில் பின்னலாடை ஏற்றுமதி 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும். இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 40 பில்லியன் டாலர் அளவிற்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. அதற்கான கட்டமைப்புகள் மற்றும் மனிதவளத்தை மேம்படுத்த வேண்டும்” என்றார்.
இதனைத் தொடர்ந்து ஆயத்த ஆடை மேம்பாட்டுக் கழக செயற்குழு உறுப்பினர் ராமு கூறுகையில்,
“இந்தியா – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் திருப்பூருக்கு ஒரு ‘வின்-வின்’ சூழ்நிலையாக அமைந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக ஏற்பட்ட சிரமங்களுக்கு பிறகு வந்த இந்த வரி குறைப்பு ஒரு வரப்பிரசாதம் போன்றது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 40 சதவீதம் இருந்த நிலையில், அதிக வரி காரணமாக தேக்கம் ஏற்பட்டது. தற்போது வரி குறைக்கப்பட்டதால் மீண்டும் தொடர்ச்சியாக ஆர்டர்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளது. தெளிவான திட்டமிடலுடன் செயல்பட்டு, திருப்பூரின் ஒரு லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கை அடைய தேவையான கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்” என்றார்