ஒரே மாதத்தில் இருமுறை இ.எம்.ஐ. வசூல் – ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மீது வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
தனியார் நிதி நிறுவனம் ஒன்று, விதிமுறைகளை மீறி ஒரே மாதத்தில் இருமுறை தவணைத் தொகையை பிடித்தம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் பிரபல தனியார் நிதி நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸ், தனிநபர் கடன், வீட்டு கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை வழங்கி, மாதந்தோறும் இ.எம்.ஐ. முறையில் தொகையை வசூலித்து வருகிறது.
இந்நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடமிருந்து கடந்த 5ஆம் தேதி வழக்கம்போல் தவணைத் தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதனைத் தொடர்ந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மீண்டும் ஒருமுறை அவர்களது வங்கி கணக்குகளில் இருந்து இ.எம்.ஐ. தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள், சென்னையில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று விளக்கம் கேட்டுள்ளனர்.
இதற்கு பதிலளித்த நிறுவன அதிகாரிகள், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறுதலாக இருமுறை தொகை பிடித்தம் செய்யப்பட்டதாகவும், அந்த கோளாறை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து உரிய விளக்கம் மற்றும் தீர்வு வழங்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.