வரும் 10-ம் தேதி திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் – பாஜக மகளிர் அணி அறிவிப்பு
தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை கண்டித்து, வரும் 10-ம் தேதி மாநிலம் முழுவதும் திமுக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக மகளிர் அணி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில மகளிர் அணித் தலைவி கவிதா ஸ்ரீகாந்த், திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதாக குற்றம்சாட்டினார்.
போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாக கூறிய அவர், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய திமுக அரசை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
அதன்படி, வரும் 10-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கவிதா ஸ்ரீகாந்த் கூறினார்.







