“தேர்தல் களத்தில் எதிர்க்கட்சிகளின் உண்மை முகம் வெளிப்படும்” – வி.பி.துரைசாமி
தமிழ்நாட்டை சர்வதேச அளவில் முக்கிய உற்பத்தி மையமாக உயர்த்தும் வகையில் மத்திய அரசின் பட்ஜெட் முக்கிய பங்கு வகித்துள்ளதாக பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டின் மூலம் தமிழகத்திற்கு கிடைத்துள்ள நன்மைகள் குறித்து பாஜக மாநில நிர்வாகிகள் தொடர்ந்து விளக்கி வருகின்றனர்.
அந்த வரிசையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த வி.பி.துரைசாமி, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தமிழக வளர்ச்சிக்கு பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசு தமிழகத்திற்கு எதையும் செய்யவில்லை என்ற தவறான பிரச்சாரத்தை திமுக முன்னெடுத்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், வரும் தேர்தல் காலத்தில் அந்த பொய்ப் பிரச்சாரங்களின் உண்மை முகம் மக்களுக்கு தெளிவாக தெரியவரும் என்றும் கூறினார்.







