தருமபுரி அருகே கஞ்சா போதைக் கும்பலால் 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட மோளையானூர் அருகே, 80 வயது மூதாட்டி ஒருவர் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் குழுவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2ஆம் தேதி, காளியம்மாள் என்ற மூதாட்டி வாணியாறு அணைப் பகுதியில் புங்கை கொட்டைகளை சேகரித்து கொண்டிருந்த போது, அங்கு வந்த சில இளைஞர்கள் அவரை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் மூதாட்டி உயிரிழந்துவிட்டதாக நினைத்து, அவரை புதருக்குள் வீசி விட்டுச் சென்றுள்ளனர். அதன்பின், அப்பகுதியில் முனகல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள், மூதாட்டியை மீட்டு உடனடியாக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததைத் தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், மாநிலத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் பெண்கள், குழந்தைகள் மற்றும் மூதாட்டிகள் உள்ளிட்ட அனைவரின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.