ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மதுபோதையில் திமுக நிர்வாகி அடாவடி
ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில், பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டி, மதுபோதையில் திமுக நிர்வாகி ஒருவர் அதிகாரியின் நாற்காலியில் அமர்ந்து அடாவடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக நிர்வாகியான குப்பன் என்பவர், மது போதையில் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, சார் பதிவாளர் நாற்காலியில் அமர்ந்ததுடன், மேஜை மீது காலையும் வைத்துக் கொண்டு கூச்சலிட்டதாக கூறப்படுகிறது.
பத்திரப்பதிவுக்காக ஒரு லட்சம் ரூபாய் வழங்கியபோதும், தன்னுடைய ஆவணங்களை வழங்காமல் சார் பதிவாளர் இழுத்தடிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். இந்த சம்பவம் சுமார் அரை மணி நேரம் நீடித்த நிலையில், அலுவலக ஊழியர்கள் இணைந்து அவரை வெளியேற்றினர்.
இந்த சம்பவத்துக்கான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகி மீது இதுவரை காவல் நிலையத்தில் எந்தவொரு புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்தாயிரம் ரூபாய் முதல் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் சூழலில், இந்த சம்பவம் மற்றும் திமுக நிர்வாகியின் கூற்றுகள் அந்த குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.