விளம்பர நோக்கில் நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் – பிரசாந்த் கிஷோருக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை
தேர்தலில் தோல்வியடைந்த அரசியல் கட்சிகள், தங்களைப் பிரபலப்படுத்தும் நோக்கில் நீதிமன்றங்களை அணுகக் கூடாது என, ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோருக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
பீகார் சட்டமன்றத் தேர்தலின்போது தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டதாக கூறி, பிரசாந்த் கிஷோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிமன்றத்தை வெறும் விளம்பர மேடையாக மாற்ற முயற்சிக்கக் கூடாது என நீதிபதிகள் கடுமையாக சுட்டிக்காட்டினர். மேலும், ஜன் சுராஜ் கட்சி தேர்தலில் பெற்ற வாக்குகள் எத்தனை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மக்கள் நிராகரித்த அரசியல் சக்திகள் மீண்டும் கவனம் ஈர்க்க நீதித்துறையை பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்தனர்.
தேர்தல்களில் அரசியல் கட்சிகள் இலவசப் பொருட்கள் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இருப்பினும் தேர்தலில் முழுமையாக தோல்வியடைந்த கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை விசாரிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தனர்.