தொடர்ச்சியான அழுத்தங்கள் – காங்கிரஸ் கூட்டணியை விலக்க திமுக ஆலோசனை என தகவல்
தேர்தல் காலகட்டத்தில் தொடர்ந்த நெருக்கடிகளை உருவாக்கி வரும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியைத் தொடர வேண்டாம் என்ற முடிவுக்கு திமுக வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மூத்த அமைச்சர்கள், கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதன் காரணமாக மத்திய அரசுடன் தேவையற்ற மோதல் நிலை உருவாகி வருவதாகவும், இதனால் அரசியல் ரீதியாக பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே, காங்கிரஸுடன் கூட்டணி தொடர வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியை திமுகவே வெளியேற்றும் நிலை ஏற்படக் கூடாது என்ற எண்ணத்தில் இருப்பதாகவும், அவர்கள் தாங்களாகவே விலகினால் அதனை ஏற்கலாம் என அமைச்சர்களிடம் கூறியதாக தெரிகிறது.
இதற்கு முன், கூட்டணியை உறுதி செய்யும் நோக்கில் கனிமொழி எம்.பி., காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சுமார் ஒரு மணி நேரம் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இருப்பினும், இதுவரை கூட்டணி உறுதிப்படுத்தப்படாததால், தொகுதி பங்கீடு தொடர்பான பணிகளைத் தொடங்க முடியாமல் திமுக குழப்பமான சூழலில் சிக்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.