ஏற்காட்டில் அடர்ந்த பனிமூட்டம் – குளிர்ச்சியான வானிலையால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏற்காடு மலைப்பகுதியை திடீரென சூழ்ந்த அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக, அப்பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகி, அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
நாள்தோறும் பெருந்தொகை சுற்றுலா பயணிகள் வருகை தரும் ஏற்காட்டில், ஏரி அருகே அமைந்துள்ள ஒண்டிக்கடை ரவுண்டானா பகுதியில், பார்வைக்கு சாலை கூட தெளிவாகத் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவியது.
இதன் காரணமாக, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஏற்றியபடியே மெதுவாக பயணம் மேற்கொண்டனர்.
மேலும், ஏற்காடு மலைச் சுற்றுப்பகுதிகளில் மேகங்கள் தரையைத் தொட்டதுபோல் பனிமூட்டம் பரவியிருந்த காட்சி சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்தது. இயற்கையின் இந்த அரிய காட்சியை கண்டு அவர்கள் உற்சாகத்தில் மூழ்கினர்.