மணப்பாறை பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் – 8 மாட்டு வண்டிகள் போலீசார் வசம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஆற்றுப் பகுதியில் அனுமதியின்றி மணல் எடுத்து வந்த 8 மாட்டு வண்டிகளை காவல்துறையினர் கைப்பற்றினர்.
மணப்பாறையை ஒட்டிய சித்தாநத்தம் கிராமப் பகுதியில் பாயும் அரியாற்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், பல மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றப்படுவதை கண்டறிந்தனர்.
அங்கு நடைபெற்ற சோதனையின் போது, மணல் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட 8 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மாடுகளை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர், மாட்டு வண்டிகளை மட்டும் சரக்கு வாகனத்தின் பின்புறம் கட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மணல் திருட்டில் ஈடுபட்டதாக 5 பேரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய 3 பேரை பிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.