பறவைக்காய்ச்சல் பரவல் – பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்
பறவைக்காய்ச்சல் பரவி வரும் சூழலில், பொதுமக்கள் அனைவரும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் சென்னை அடையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான காகங்கள் திடீரென உயிரிழந்ததாகவும், அவற்றை ஆய்வு செய்ததில் H5N1 வகை வைரஸ் தொற்று, அதாவது பறவைக்காய்ச்சல் காரணமாகவே மரணம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை பறவைக்காய்ச்சல் காரணமாக மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பும் பதிவாகவில்லை என்பது நிம்மதியளிக்கும் விஷயமாக இருந்தாலும், எதிர்காலத்தில் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதனால், இறந்து கிடக்கும் பறவைகளை யாரும் கைகளால் தொட்டு அகற்ற வேண்டாம் என்றும், பறவைப் பண்ணை நடத்துபவர்கள் தங்களது பண்ணைகளில் பாதுகாப்பு நடைமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பறவைகள் மற்றும் விலங்குகளுடன் நேரடி தொடர்பில் இருந்து முடிந்தவரை விலகி இருக்க வேண்டும் என்றும், காய்ச்சல், சளி உள்ளிட்ட உடல் குறைபாடுகள் தோன்றினால் தாமதமின்றி மருத்துவரை அணுக வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.