தமிழக பெண்களுக்கும் வெளியூர்ப் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் – திமுக அரசை சாடிய நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் வசிக்கும் பெண்களுக்கும், வேலை அல்லது பிற காரணங்களுக்காக தமிழகத்திற்கு வரும் பெண்களுக்கும் போதிய பாதுகாப்பு இல்லை என திமுக அரசை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அடையக்கருங்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் செங்கல் சூளையில் பணியாற்றிய வடமாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை, அதே சூளைக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வரும் திமுக ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் கைது நடவடிக்கைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறதே தவிர, குற்றச் சம்பவங்கள் குறைவதாக எந்த அடையாளமும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக திமுக ஆட்சியில் வடமாநிலப் பெண்களும், வடமாநிலத் தொழிலாளர்களும் தொடர்ந்து வன்முறைக்கு உள்ளாகி வருவது கவலைக்கிடமானதாக இருப்பதாகவும், இந்த நிலை எல்லையற்ற வகையில் நீடித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பொது மேடைகளில் கூட நாகரிகம் இல்லாமல், வட இந்தியர்களை “வடக்கன்”, “பானிபூரி வியாபாரி”, “மேசை துடைப்பவர்” போன்ற இழிவான சொற்களால் திமுக தலைவர்கள் பேசுவது தான் இத்தகைய குற்றங்களுக்கு மறைமுகமாக காரணமாகிறது என்பதை ஆட்சியிலிருப்பவர்கள் உணர மறுப்பது மிகுந்த அறியாமை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
வேற்றுமைகளுக்கிடையே ஒற்றுமையை வலியுறுத்தும் பாரத நாட்டில், தமிழகத்தில் மட்டும் பிற மாநில மக்களை இரண்டாம் தர குடிமக்களாக பார்க்கும் திமுகவின் பிளவூட்டும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.