தி.மலையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற உத்தரவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் மலைச் சரிவுகளிலும் நீர்நிலைகளிலும் ஆக்கிரமித்தவர்களின் முழுப்பட்டியலை தமிழக அரசால் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள தாமரைக்கேணி உள்ளிட்ட நீர்நிலைகள் மற்றும் மலையில் ஓடைகள் மீது ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டுமானங்களை அகற்றக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் பொது நல வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் வழக்கு விசாரணை நடந்தபோது, திருவண்ணாமலையில் அடையாளம் காணப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.
மனுதாரர் தரப்பில், மலைச் சரிவுகளில் ஆக்கிரமித்தவர்களுக்கு மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஓடைகள் மற்றும் குளங்களில் ஆக்கிரமித்தவர்களுக்கு எதுவும் செய்யப்படவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் மலைச் சரிவுகளிலும் நீர்நிலைகளிலும் ஆக்கிரமித்தவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்