அடிப்படை வசதிகள் இன்றியே அவசரமாக திறக்கப்பட்ட தருமபுரி புதிய பேருந்து நிலையம்
தருமபுரி மாவட்டத்தில் தேவையான அடிப்படை வசதிகள் கூட முழுமையாக ஏற்படுத்தப்படாத நிலையில், புதிய பேருந்து நிலையம் அவசரமாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
மாவட்டத்தின் மையப்பகுதியில் செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையம், மக்கள் எண்ணிக்கை அதிகரிப்பை கருத்தில் கொண்டு வேறு இடத்திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் தீர்மானித்தது. இதனைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு சேலம்–கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய தனியார் நிலத்தில் ரூ.40 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த நிலையில், தருமபுரி புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். ஆனால், குடிநீர், கழிப்பிடம், பயணிகள் நிழற்குடை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் முறையாக ஏற்படுத்தப்படாமல், வெறும் அவசர நோக்கில் நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் புதிய நிலையம் அமைந்துள்ளதால், பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், நகராட்சி பேருந்து நிலையத்தை விளம்பர நோக்கத்திற்காக தனியார் வசமாக ஒப்படைத்துள்ளதாகவும் பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.