மேகாலயாவில் சட்டத்திற்கு புறம்பான நிலக்கரி சுரங்கத்தில் வெடிப்பு – 18 பேர் உயிரிழப்பு
மேகாலயா மாநிலத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சுமார் 18 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள தஷ்காய் பகுதியிலேயே இந்த சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. அங்கு ஏற்பட்ட வெடிப்பில் சிக்கி இதுவரை 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்து நேரத்தில் பணியில் இருந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அரசின் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவுடன் தொலைபேசி மூலம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த விபத்து தொடர்பாக மத்திய அரசின் முழு ஆதரவும் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.