மதுரையின் உயிர்ச் சின்னமே மீனாட்சியம்மன் கோயில் – சேதம் ஏற்பட்டால் நகரமே பாதிக்கப்படும்: சாலமன் பாப்பையா
மதுரை நகரம் இன்று உயிருடன் திகழ்வதற்கான முதன்மைக் காரணம் மீனாட்சியம்மன் கோயில்தான் என்றும், அந்தப் புனித ஆலயத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் மதுரையின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்றும் பட்டிமன்ற பேச்சாளரும் பேராசிரியருமான சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.
மதுரையில் “என் ஊர் என் கனவு” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் அவர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் அமைச்சர் மூர்த்தி, மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
அந்த சந்தர்ப்பத்தில் பேசிய சாலமன் பாப்பையா, மதுரை பேருந்து நிலையம் தற்போது சத்திரம் சாவடியைப் போன்று மாறிவிட்டதாகவும், சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், நகரில் அவசர அவசரமாக சாலைகள் அமைக்கப்படுவதாகவும், ஒரே ஒரு மழையிலேயே அவை சேதமடைந்து விடுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்பது குறித்து வேதனை தெரிவித்த அவர், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கோயிலில் இப்படியாக நீர் தேங்கினால், அந்தக் கட்டடத்தின் நிலை என்ன ஆகும்? என்று கேள்வி எழுப்பினார்.