சேலத்தில் நடைபெற்ற பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பு
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 24-ஆவது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழகத்தின் ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்த விழாவின் போது, முனைவர் பட்ட ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்த 358 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும், பெரியார் பல்கலைக்கழகத்தின் துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலைப் பாடப்பிரிவுகளில் சிறந்த தேர்ச்சி பெற்ற 110 மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்த பட்டமளிப்பு விழாவில், கல்லூரி கல்வி இயக்கத்தின் இயக்குநரும், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் நிர்வாகக் குழுவின் அமைப்பாளருமான சுந்தரவல்லி, குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி, ஜெயந்தி, பதிவாளர் ராஜ், தேர்வாணையர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.