மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே – ஜெ.பி. நட்டா இடையே கடும் வாதம்
மாநிலங்களவை கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா ஆகியோருக்கிடையே தீவிர வாக்குவாதம் ஏற்பட்டது.
மாநிலங்களவை தொடங்கிய உடனே, மக்களவையில் ராகுல் காந்திக்கு பேச வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜெ.பி. நட்டா, மக்களவையில் நடைபெறும் நடவடிக்கைகளை மாநிலங்களவையில் விவாதிக்க இயலாது என்பதைக் எதிர்க்கட்சித் தலைவர் புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்று ஒவ்வொரு பிரச்சினையையும் விரிவாக விவாதிக்க அரசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில், அவையை முடக்கி வைக்க பக்குவமற்ற குழந்தை போல நடந்து கொள்ள முடியாது என ஜெ.பி. நட்டா கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து, இருவருக்கிடையே கடும் வாக்குவாதம் வெடித்தது.
இதனைத் தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, நாடாளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து பாதிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். மக்களவை செயல்படாதபோது, மாநிலங்களவையும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் அணுகுமுறை எனவும் அவர் விமர்சித்தார்.
பின்னர் உரையாற்றிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக குறித்து மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்த கருத்துகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். கும்பல் வன்முறை சம்பவங்களுக்கு காரணம் காங்கிரஸ் தான் என அவர் குற்றம் சாட்டினார். ராஜஸ்தானில் நடைபெற்ற டெய்லர் கொலை உள்ளிட்ட கடந்தகால நிகழ்வுகளை எடுத்துக்காட்டி, கார்கேவின் கருத்துகளுக்கு அவர் பதிலடி கொடுத்தார்.